Published : 17 Nov 2021 03:07 AM
Last Updated : 17 Nov 2021 03:07 AM

புதூர், தேவசமுத்திரம் ஏரிகள் நிரம்பியதால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் : மக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்

கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. நகரின் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் கழிவுநீருடன், மழைநீர் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் உள்ள புதூர் ஏரி நிரம்பியதால், தண்ணீர் வெளியேறியது. ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல போதிய கால்வாய் வசதி இல்லாததால், தேவசமுத்திரம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் செல்லும் வகையில் ஜேசிபி வாகனம் மூலம் தூர்வாரப்பட்டது.

இந்த உபரிநீர் தேவசமுத்திரம் ஏரிக்குச் சென்றது. தேவசமுத்திரம் ஏரியும் நிரம்பி வழிந்ததால், வெளியேறிய உபரிநீர் அக்ரஹாரம், முல்லைநகர் கிராமங்களுக்குள் புகுந்து, அவதானப்பட்டி ஏரிக்குச் சென்றது. காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில் அருகேயும், முல்லை நகர் பகுதியில் சாலையில் ஓடிய தண்ணீரில் கிராம மக்கள் வலைவீசியும், துணிகளைக் கொண்டும் மீன் பிடித்து மகிழந்தனர்.

ஆக்கிரமிப்பு

புதூர் ஏரி, தேவசமுத்திரம் ஏரிக்குச் செல்லும் கால்வாய்கள் பல்வேறு இடங்களில் சுருங்கியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் சாலையில் வீணாக ஓடியது. தார் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியது. எனவே, தொடர்புடைய பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நீர்வரத்து கால்வாய்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையளவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 52.9, ஓசூர் 19.2, தளி 15, ராயக்கோட்டை 6, தேன்கனிக்கோட்டை 7, சூளகிரியில் 8 மிமீ மழை பதிவாகி இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x