தோவாளைபுதூர் இளைஞர் இறப்பு வழக்கில் - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் : போலீஸாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

தோவாளைபுதூர் இளைஞர் இறப்பு வழக்கில் -  விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் :  போலீஸாருக்கு   உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
Updated on
1 min read

தோவாளைபுதூர் இளைஞர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் போலீஸார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் தோவாளை புதூரைச் சேர்ந்த எஸ்.சுமன் ஆனந்த், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நாங்கள் எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள். என் சகோதரர் சுரேஷ்குமார்(27). பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இவர் ஆரல்வாய்மொழி கல்லூரியில் படிக்கும் போது, வேறு சாதியைச் சேர்ந்த தங்கநீலா என்பவரை காதலித்தார். இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்தனர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனிடையே தங்கநீலாவுக்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். நாங்கள் சுரேஷ்குமாருக்கு அவரை பெண் கேட்டதற்கு மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு எதிராக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பெண் வீட்டினர் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு போலீஸார் அழைத்ததால் சுரேஷ்குமார் 7.11.2021-ல் மோட்டார் சைக்கிளில் பூதப்பாண்டி காவல் நிலையம் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால் அவர் காவல் நிலையம் செல்லவில்லை. காட்டுப்புதூரில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

சுரேஷ்குமாரை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் போலீஸார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, சுரேஷ்குமார் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யவும், எங்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும், பூதப்பாண்டி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய பூதப்பாண்டி போலீஸாருக்கு உத்தரவிட்டு விசாரணையை நவ.24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in