தூத்துக்குடியில் ஏரிகள், குளங்கள் நிரம்பாத நிலையில் - கடலுக்கு வீணாக செல்லும் 10,300 கனஅடி தண்ணீர் : தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டப்படுமா?

தூத்துக்குடியில் ஏரிகள், குளங்கள் நிரம்பாத நிலையில்  -  கடலுக்கு வீணாக செல்லும் 10,300 கனஅடி தண்ணீர்  :  தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டப்படுமா?
Updated on
1 min read

திருநெல்வேலி மற்றும் தென்காசிமாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்தவாரம் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கெனவேஅணைகள் அனைத்தும் நிரம்பும்நிலையில் இருப்பதால் உபரிநீர்தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

அணைகளில் இருந்து 10 ஆயிரம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் கடந்த 12-ம் தேதி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுபடிப்படியாக உயர்ந்து 15 ஆயிரம் கன அடி அளவுக்கு அதிகரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றில் வந்த தண்ணீர் அப்படியே வைகுண்டம் அணையைத் தாண்டி கடலுக்கு சென்றது. கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை குறைந் துள்ளது. இருப்பினும் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வைகுண்டம் அணையைத் தாண்டி 10,300 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் மழைக்காலத்தில் அதிகமான தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏரிகள், குளங்கள் இன்னும் முழுமையாக நிரம்பாத நிலையில், தண்ணீர் வீணாக செல்வது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.

எனவே, தாமிரபரணி ஆற்றில் அதிக தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in