Published : 16 Nov 2021 03:11 AM
Last Updated : 16 Nov 2021 03:11 AM

பள்ளி மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம் : திருப்பத்தூர் மாவட்ட சிஇஓ அய்யண்ணன் தொடங்கி வைத்தார்

கந்திலி வட்டார வள மையத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி களில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அவற்றை மாணவர்கள் மூலர் பூர்த்தி செய்து அந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதற்காக, திருப்பத்தூர் மாவட்டத்தில் அந்தந்த வட்டாரங் களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் கந்தலி வட்டார வள மையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1.40 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், ஆதார் அட்டை இதுவரை எடுக்காதவர்கள் விவரம் சேகரித்தபோது, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, கந்திலி, மாதனூர், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 11,596 பேர் ஆதார் அட்டை எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.

இவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கந்திலி ஒன்றியத்தில் இன்று (நேற்று) சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. கந்திலி வட்டார வள மையத்தில் 2 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெறும். பள்ளி வேலை நாட்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களிலும் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. காலையில் பள்ளி நேரம் தொடங்கியது முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெறும்.

17 மற்றும் 18-ம் தேதிகளில் விஷமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நவம்பர் 22 மற்றும் 23-ம் தேதிகளில் கொரட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நவ. 24 மற்றும் 25-ம் தேதிகளில் காக்கங்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

ஆதார் அட்டை இல்லாத மாணவர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது தாய், தந்தையரின் ஆதார் அட்டையை கொடுத்து, புதிய ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x