Published : 14 Nov 2021 03:08 AM
Last Updated : 14 Nov 2021 03:08 AM

பெரியகோட்டை கிராமத்தில் முதல்வர் ஆய்வு :

மதுக்கூர் அருகே பெரியகோட்டை கிராமத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக ஏறத்தாழ 7,000 ஹெக்டேரில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. சில பகுதிகளில் தண்ணீர் வடிந்த நிலையில், தற்போது 3,698 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுதொடர்பாக, ஏற்கெனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த அமைச்சர்கள் குழுவினர் மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மதுக்கூர் அருகே பெரியகோட்டை கிராமத்தில் நீரில் மூழ்கிய சம்பா பருவ நெற்பயிர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணியளவில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இதற்காக, அங்கு தற்காலிகமாக ஜெனரேட்டர்கள் மூலம் மின் விளக்குகள் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை கையில் எடுத்து வந்து, முதல்வரிடம் காண்பித்தனர். அவர்களிடம் பயிர் பாதிப்பின் தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

பின்னர், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வரிடம் அலுவலர்கள் விளக்கினர். இதையடுத்து, முதல்வர் சாலை வழியாக திருச்சிக்குச் சென்று விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

ஆய்வின்போது, முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x