சத்தியமங்கலம் அருகே -  அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு :

சத்தியமங்கலம் அருகே - அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு :

Published on

சத்தியமங்கலம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை நீலகிரி எம்பி ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர் ஊராட்சி, நடுப்பாளையத்தில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளியில் 2018-ம் ஆண்டு இரு மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். இப்பள்ளியின் மேலாண்மைக்குழுவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளால், தற்போது 91 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை வசதி வேண்டும் என நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசாவிடம் பள்ளி மேலாண்மைகுழுவினர் மனு அளித்தனர்.

இதையடுத்து எம்பி தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இந்த வகுப்பறையை எம்.பி ஆ.ராசா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென எம்.பி.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. வகுப்பறைக் கட்டிடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித் தருவதாக உறுதியளித்த ராசா, ஆசிரியர் நியமனம் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் ராசாத்தி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சுமித்ரா, சுடர் அமைப்பின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ், தலைமை ஆசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in