Published : 12 Nov 2021 03:18 AM
Last Updated : 12 Nov 2021 03:18 AM

தற்காலிக பேருந்து நிலையங்களை செயல்படுத்தும் முடிவை - திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது : மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நடவடிக்கை

திருவண்ணாமலையில் 10 நாட்களுக்கு 4 தற்காலிக பேருந்து நிலையங்களை செயல்படுத்தும் முடிவை ‘இந்து தமிழ் திசை’யின் செய்தி எதிரொலியாக கைவிட்டு, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அனுமதித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெளியூர் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டு, நகரில் எல்லையில் 4 தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து, நவம்பர் 10-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனைத்து தரப்பு மக்களும், நோயாளிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் வெளியூர்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரது நலனை கருத்தில் கொண்டு, 10 நாட்களுக்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படுத்தப்படும் என்ற முடிவை, ஆட்சியர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள், மகா தீபம் ஏற்றப்படும் நாளுக்கு முதல் நாளில் (18-ம்தேதி) இருந்து இரண்டு நாட்களுக்கு வழக்கம்போல் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான செய்திகடந்த 9-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக, 10 நாட்களுக்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் என்ற முடிவை கைவிட்டு, தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்க ஆட்சியர் அனுமதித்துள்ளார். அதன்படி, கடந்த 2 நாட்களாக வழக்கம்போல் பேருந்துகள் தடையின்றி இயக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x