தேனீ வளர்ப்புக்கு 35 சதவீத மானிய கடன் : கதர் கிராம தொழில் வாரிய அதிகாரி தகவல்

தேனீ வளர்ப்புக்கு  35 சதவீத மானிய கடன் :  கதர் கிராம தொழில் வாரிய அதிகாரி தகவல்
Updated on
1 min read

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் வீட்ஸ் நிறுவனத்தில் இந்திய அரசு கதர் கிராம தொழில் வாரியத்தின் மதுரை மண்டல அலுவலகம், மாநில தேனீ வளர்ப்போர் மையம் சார்பில் இலவச தேனீ பெட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்திய அரசு கதர் கிராம தொழில் வாரியத்தின் மதுரை மண்டல இயக்குநர் அசோகன் தலைமை வகித்து பேசியதாவது:

தேனீ வளர்ப்போரில் 20 பேரை தேர்வு செய்து 5 தினங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒரு உறுப்பினருக்கு தலா 20 தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் கிடைக்கும் முருங்கை தேனீல் மருத்துவ குணம் உள்ளதால் 2 ஆண்டுகளுக்கு மேல் கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும். வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தேனீ வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக உள்ளது.

இப்பகுதியில் எடுக்கப்படும் முருங்கை தேன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேனீ வளர்ப்பு மற்றும் உற்பத்தி தொழிலுக்கு வங்கிகள் மூலம் 35 சதவீத மானிய கடன் வழங்கப்படும் என்றார் அவர்.

தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், குழித்துறை தேனீ வளர்ப்போர் பயிற்சியாளர் லாசர், வீட்ஸ் இயக்குநர் சார்லஸ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் இருளப்பன், ஷாஜி மோகன்சிங், வீட்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in