Published : 09 Nov 2021 03:09 AM
Last Updated : 09 Nov 2021 03:09 AM

கனமழையை எதிர்கொள்ளும் வகையில் - பெரும்பள்ளம் ஓடைப்பகுதி மக்களை பள்ளிகளில் தங்கவைக்க நடவடிக்கை : ஈரோடு மாநகராட்சி ஆணையர் தகவல்

கனமழையை எதிர்கொள்ளும் வகையில், பெரும்பள்ளம் ஓடைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மழை பெய்தால் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கென ஒரு மண்டலத்திற்கு ஒரு குழு வீதம் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி ஆணையர், சுகாதாரப்பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்டோருடன், மீட்புப் பணிகளுக்கு ஒரு மண்டலத்திற்கு ஒரு ஜேசிபி இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு நகரில் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, கரையோரப் பகுதி மக்கள் தங்குவதற்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.

பெரும்பள்ளம் ஓடை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் செல்லவும், அருகிலுள்ள பள்ளிகளில் அவர்களை தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x