Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM

ஏற்காடு, குரும்பப்பட்டியில் பயணிகள் வருகை அதிகரிப்பு :

தீபாவளி தொடர் விடுமுறையை தொடர்ந்து ஏற்காடு, குரும்பப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காடு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளிட்ட பகுதியில் ஆண்டு முழுவதும் பயணிகள் வருகை இருக்கும். இந்நிலையில், தீபாவளி விடுமுறையுடன் ஞாயிறு விடுமுறைநாளான நேற்று ஏற்காட்டில் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரள, கர்நாடக, ஆந்திர, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர்.நேற்று பகலில் மேகமூட்டத்துடன் இருண்ட வானிலை நிலவிய நிலையில் மழையில்லாததால் ஏற்காடு சுற்றுலாப் பகுதியை பயணிகள் பார்த்து ரசித்தனர்.

இதுதொடர்பாக சுற்றுலாத்துறையினர் கூறும்போது, “ஏற்காடு மாற்றுப் பாதையான குப்பனூர் சாலையில், இரு தினங்களுக்கு முன்னர் மண் சரிவு ஏற்பட்டு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தீபாவளி பண்டிகை விடுமுறையில் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. எனினும், வழக்கமான ஞாயிறு விடுமுறையை விட, நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்தது” என்றனர்.

இதனிடையே, கன்னங்குறிச்சிஅடுத்த கற்பகம் தடுப்பணையில் நேற்று சேலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

மேலும், தடுப்பணையை அடுத்துள்ள புதுஏரியிலும், ஏரி வடிகால் வாய்க்காலிலும் பலர்குளித்தனர். இதேபோல, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x