`நீட்’ தேர்வு மதிப்பெண் அச்சத்தில் - விஷம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :

`நீட்’  தேர்வு மதிப்பெண் அச்சத்தில் -  விஷம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :
Updated on
1 min read

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவரது மகன் சந்திரபோஸ் (20). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்து விட்டு, கடந்த 2020-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண் பெற்றார்.

2-வது முறையாக இந்த ஆண்டும் அவர் நீட் தேர்வு எழுதியிருந்தார். கடந்த 2-ம் தேதி தேர்வு முடிவு வெளியாக இருந்த நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் அவர் தேர்வு முடிவு வெளியாகும் முன்னர் விஷம் குடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட அவரது பெற்றோர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக தலைவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்திரபோஸ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் 158 மதிப்பெண்களும், இந்த ஆண்டு தேர்வில் 261 மதிப்பெண்களும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in