சுய தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் கடன் :

சுய தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் கடன் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 95 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்கும். பயனாளிகள் தங்கள் சொந்த முதலீடாக திட்ட முதலீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை) மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 300 பேருக்கு அரசு மானியமாக ரூ.2.60 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 வயதுக்கு மேற்பட்ட, அதிகபட்சம் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதி உடையவர்கள் ஆவர். சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயது வரை தளர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.msmetamilnadu.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை, தூத்துக்குடி என்ற முகவரியில் அணுகி பயனடையலாம். இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in