விருதுநகரில் வங்கிக் கடன் வழங்கும் முகாமில் -  2,238 பேருக்கு ரூ.157.22 கோடி கடனுதவி :

விருதுநகரில் வங்கிக் கடன் வழங்கும் முகாமில் - 2,238 பேருக்கு ரூ.157.22 கோடி கடனுதவி :

Published on

விருதுநகரில் நேற்று நடைபெற்ற வங்கிக் கடன் வழங்கும் முகாமில் 2,238 பேருக்கு ரூ.157.22 கோடி கடன் வழங்கப்பட்டது.

விருதுநகரில் மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக, மாபெரும் வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், வங்கித் துறையில் நவீன மயமாக்கப்பட்டு வரும் சேவைகள் குறித்தும், வங்கி மின்னனு பரிவர்த்தனை குறித்தும், விவசாயக் கடன், கல்விக்கடன், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன், வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் மற்றும் மத்திய, மாநில அரசின் கடன்கள் குறித்து மக்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைக்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், வேளாண்மைக் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன், தொழில் கடன், அரசு மானியக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன், தனிநபர் கடனாக 2,238 பேருக்கு ரூ.157.22 கோடி மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.

நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் (தூத்துக்குடி) ஸ்ரீராம், பாரத வங்கி மண்டல மேலாளர் சிவானந்தன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல் உள்பட பல்வேறு வங்கி மேலாளர்கள் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in