Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM

ராஜவாய்க்காலில் 6 மாதங்களாக : தண்ணீர் திறக்கவில்லை : திருப்பூர் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது.

காங்கயம் வட்டம் பாலசமுத்திரபுதூர் ஊராட்சி கத்தாங்கண்ணி ராஜவாய்க்கால் மதகு பாசன விவசாயிகள் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கத்தாங்கண்ணி ராஜவாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயம் செய்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்காக தண்ணீர் நிறுத்தப்பட்டு, பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவுற்று 6 மாதங்கள் ஆன நிலையிலும், இதுவரை கத்தாங்கண்ணி ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை. தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும். நொய்யலாற்றில் மழைநீர் கலந்து வருவதால், சிலர் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதை தடுக்க வேண்டும், என்றனர்.

சாமளாபுரம் விசைத்தறியாளர்கள் அளித்த மனுவில் ‘நாங்கள் விசைத்தறி தொழிலுக்காக கடன் பெற்றிருந்தோம். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் விசைத்தறியில் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். கடனை திருப்ப செலுத்துமாறு வங்கிகள் நெருக்கடி தருகின்றன. எங்கள் தரப்பு கோரிக்கைக்கு வங்கிகள் செவிசாய்க்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தனி அதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x