திருப்பூர் அரசு மருத்துவமனையில் பக்கவாத நோய் விழிப்புணர்வு :

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பக்கவாத நோய் விழிப்புணர்வு :
Updated on
1 min read

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு நாள் விழா நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மருத்துவ கல்லூரி முதல்வர் ரா. முருகேசன் தலைமை வகித்தார்.

இந்திய மருத்துவ சங்க நிலைக்குழு தலைவர் ஏ. முருகநாதன் பேசியதாவது: அறிகுறி தெரிந்த அல்லது பக்கவாதம் ஏற்பட்ட நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு தொடர்புடைய நபரை அழைத்து வந்தால், மூளை நரம்புகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து, பக்கவாத பாதிப்புக்கு உள்ளானவரை மீட்கலாம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. புகைபிடிப்பது, மது அருந்தும் பழக்கம் இல்லாமல் வாழ்ந்தால், பக்கவாதம் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நாட்டில் 57 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் காரணமாக பக்கவாதம் ஏற்படுகிறது. ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கொழுப்புச்சத்து மற்றும் உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து செவிலிய மாணவிகள் ஊர்வலமாக சென்று, தாராபுரம் சாலை வழியாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். இதையடுத்து அனைவரும் பக்கவாத நாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in