Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

ராமநாதபுரம், சிவகங்கையில் பலத்த மழை : பாம்பனில் அதிகபட்சமாக 70.8 மி.மீ. மழை பதிவு

ராமநாதபுரம், சிவகங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பாம்பனில் அதிகபட்சமாக 70.8 மி.மீ. மழை பதிவானது.

தமிழகத்தில் கடந்த 26-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங் கியது. அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பாம்பன், தங்கச்சிமடத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பாம்பன் தெற்குவாடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம்- 53.6, பாம்பன்- 70.8, தங்கச்சிமடம்- 50.4, மண்டபம்- 36.6, ராமேசுவரம்- 40.2, பள்ளமோர்குளம்- 15, திருவாடானை- 32.9, தீர்த்தாண்டதானம்- 20.3, தொண்டி- 29, வட்டாணம்- 14.9, ஆர்.எஸ்.மங்கலம்- 25, பரமக்குடி- 19.2 மி.மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.08 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது விதைப்பு முதல் 45 நாட்கள் பயிராக உள்ளது. வட கிழக்குப் பருவ மழையால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். களை எடுப்பு, உரம் இடுதல், மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் இளையான்குடி அருகே சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், முனைவென்றி உள்ளிட்ட பகுதிகளில் நெல், மிளகாய் பயிரிடப்பட்ட நிலங்களில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் 40 ஏக்கருக்கு மேல் நெல், மிளகாய் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர் மழையால் இளையான்குடி அருகே அரண்மனைக்கரை கிராமத்தில் சேகர் என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.ல்): தேவகோட்டை- 41.80, காரைக்குடி- 41.20, சிவகங்கை- 11 மி.மீ, மானாமதுரை- 24.60, திருப்புவனம்- 22, இளையான்குடி- 19, திருப்பத்தூரில் 15, காளையார்கோவில்- 21.60, சிங்கம்புணரி- 12.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x