Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட தடை கோரி வழக்கு : தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தடைகோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த என்.நீலகண்டன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

பொன்னவராயன் கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 1957-ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதியில் 1986-ல் கிராம ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. பின்னர் அங்கன்வாடி, நூலகம், ரேஷன் கடை, தபால் அலுவலகங்கள் கட்டப்பட்டன. ஊராட்சி அலுவலகம் சிதிலம் அடைந்த நிலையில் நூலகக் கட்டிடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.

அந்த நூலகம் 2018 கஜா புயலில் சேதமடைந்தது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டினால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x