காளையார்கோவில் பிடிஓ மீது தாக்குதலை கண்டித்து - ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் போராட்டம் :

காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.
காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.
Updated on
1 min read

சார் வணக்கம்; இச்செய்தி முக்கியம்

::::

காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரை ஒன்றியத் தலைவர் முன்னிலையில் துணைத் தலைவர் தாக்கியதை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

காளையார்கோவில் ஒன்றியத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென ஒன்றியக் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக ஒன்றியத் தலைவர் அறையில் தலைவர் ராஜேஸ்வரி (அதிமுக), துணைத் தலைவர் ராஜா (பாஜக), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சத்யன் ஆகியோர் நேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை துணைத் தலைவர் ராஜா தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து ஒன்றிய அலுவலக ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்தனர். தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலச் செயலாளர் செல்வக்குமார், மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அருணகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் புகார் செய்தனர். ஊராட்சித் தலைவர்களும் ஆட்சியரிடம் புகார் கொடுத்தனர்.

இது குறித்து துணைத் தலைவர் ராஜா கூறுகையில், ‘ஏற்கெனவே தேசிய வேலை உறுதித் திட்டத்தில் எங்களுக்கு ஒதுக்கிய பணியை ஊராட்சித் தலைவருக்கு வழங்கிவிட்டார். இது குறித்து கேட்டதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முறையாக பேசவில்லை. இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் அவரை தாக்கவில்லை’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in