Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

அட்டைப் பெட்டிகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் : உற்பத்தியாளர்கள் கோரிக்கை

அட்டைப் பெட்டிகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை மத்திய அரசு குறைக்கவேண்டும் என தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்க கோவை மண்டல துணைத்தலைவர் திருமூர்த்தி தெரிவித்தார்

கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கரூர் மாவட்டத்தில் 32 அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை கரூர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையான அட்டைப் பெட்டிகளை உற்பத்தி செய்து வருகின்றன.

இவற்றில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு ரூ.70 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் கோவை மண்டல அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நிலக்கரி பற்றாக்குறை, இறக்குமதியாகும் கழிவுத்தாள்(வேஸ்ட் பேப்பர்) தட்டுப்பாடு, காகித ஆலைகள் அட்டைப் பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான காகிதத்தின் விலை, பசைமாவு, ஸ்டிச்சிங் பின் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும், ஜிஎஸ்டி வரி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இம்மாதம் முதல் அட்டைப் பெட்டிகளின் விலையை 20 சதவீதம் உயர்த்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, ஜிஎஸ்டி வரி உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து நலிந்து வரும் அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x