Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

குமரியில் நீடிக்கும் மழை - அணைகளில் இருந்து 2,674கனஅடி தண்ணீர் திறப்பு :

குமரி மாவட்டத்தில் சமீபத்தில் 4 நாட்கள் பெய்த கனமழையால் அணைகள் நிரம்பி 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததுடன், விவசாயப் பயிர்கள் சேதமாயின. வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

மழை நின்று இயல்புநிலை திரும்பிய நிலையில், கடந்த 3 நாட்களாக மீண்டும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறி்ல் 64 மிமீ மழை பெய்திருந்தது. கன்னிமாரில் 62 மிமீ, ஆனைகிடங்கில் 59, அடையா மடையில் 58, பூதப்பாண்டியில் 32, சுருளகோட்டில் 26, பெருஞ்சாணி மற்றும் முக்கடல் அணையில் தலா 24, புத்தன்அணையில் 22, பேச்சிப்பாறையில் 18 மிமீ மழை பதிவாகியிருந்தது.

அணைகள் முழு கொள்ளளவில் இருக்கும் நிலையில், மழை தொடர்வதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 1,635 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. நீர்மட்டம் 43.53 அடியாக உள்ளது. 1,602 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.82 அடியாக உள்ளது. 1,110 கனஅடி தண்ணீர் வருகிறது. 800 கனஅடி வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்று அணைக்கு 243 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. 272 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இவை 3 அணைகளில் இருந்தும் மொத்தம் 2,674 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. `மழை தொடரும்’ என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அணைகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x