Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM
நாகை மாவட்டத்தில் 87 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 6,752 விவசாயிகளிடம் இருந்து, 23,106 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய தொகை ரூ.31.33 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான கோவில்பத்து சேமிப்புக் கிடங்கு, திருப்பூண்டி ஊராட்சி திறந்தவெளி நெல் சேமிப்பு மையம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை நேற்று ஆட்சியர் அருண் தம்புராஜுடன் சென்று, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஏ.சிவஞானம் ஆய்வு செய்தார்.
பின்னர், நாகை ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஏ.சிவஞானம் பேசியது:
நடப்பு பருவத்துக்கு நாகை மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி கடந்த 1-ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 87 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 6,752 விவசாயிகளிடம் இருந்து 23,106 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய தொகை ரூ.31,32,98,062 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும், திறந்தவெளி சேமிப்பு மையங்கள், கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நெல்லை இருப்பு வைப்பதற்கு கூடுதலாக தேவைப்பட்டால், கிடங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து, திருப்பூண்டி திறந்தவெளி சேமிப்பு மையம் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம், இது மழைக்காலம் என்பதால் நெல் மூட்டைகள் தேக்கம் அடையாமல் இருக்க உடனுக்குடன் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் போ.பாண்டியன், துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) ஜி.ரங்கநாதன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) ஜி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT