Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

ஆரணியில் பிரியாணி சாப்பிட்டதால் சிறுமி உயிரிழப்பு - ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக கூறியதால் உணவக உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் :

தி.மலை மாவட்டம் ஆரணி பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில், துந்தரீகம்பட்டையைச் சேர்ந்த ஆனந்த், அவரது மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி ஆகியோர் கடந்த செப்.8 அன்று பிரியாணி சாப்பிட்டு வீடு திரும்பியுள்ளனர். அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி லோசினி மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து அந்த உணவகத்துக்கு ‘சீல்’ வைக்கப் பட்டது.

கடை உரிமையாளர் அம்ஜத்பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நடந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் கவனக்குறைவால் இந்தசம்பவம் நடைபெற்றுவி்ட்டது என்றும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க தயாராக உள்ளோம், எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் 40 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதாலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளதாலும் அவர்கள் இருவரும் 2 வார காலத்துக்கு தினசரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கியதற்கான ஆவணங்களை ஆரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம், எனவும் உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x