Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரங்களுடன் - 35 ஆயிரம் டன் கூடுதலாக வழங்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய யூரியா, டிஏபி, எம்ஓபி உரங்களை வழங்குவதுடன் கூடுதலாக 35 ஆயிரம் டன் உரங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய உரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் தென்மேற்கு பருவமழை காலத்தில் பரவலாக மழையை பெற்றுள்ளதுடன், மேட்டூர் அணையும் திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பகுதி பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக அதிகமாக குறுவை சாகுபடி காலத்தில் 4.9 லட்சம் ஏக்கரை கடந்து நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

மேலும், மாநிலத்தில் முக்கிய அணைகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டதால், 10 லட்சம் ஏக்கருக்கும் மேலாக நெல் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட 2.72 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் பயிர்களின் சாகுபடி மொத்த பரப்பு 55.5 லட்சம் ஏக்கரை தாண்டியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், இந்தாண்டு சம்பா சாகுபடியும் நன்கு இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, அனைத்து உரங் களுக்கும் குறிப்பாக யூரியாவுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மத்திய அரசு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 4.911 லட்சம் டன் யூரியா வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், உர நிறுவனங்கள் இதுநாள் வரை 3.852 லட்சம் டன் யூரியாவை மட்டும் வழங்கியுள்ளன. இதனால், 1.059 லட்சம் டன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல், இந்த காலகட்டத்தில் வழங்க வேண்டிய 1.47 லட்சம் டன் டிஏபி உரங்களில், 1.15 லட்சம் டன் உரத்தையே வழங்கியுள்ளதால், அதிலும் 32 ஆயிரம் டன் பற்றாக்குறை உள்ளது.

அக்டோபர் மாதத்துக்கான வழங்கல் திட்டத்திலும் தேவையான அளவை விட குறைவான அளவில் யூரியா மற்றும் டிஏபி உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு சம்பா சாகுபடி காலம் மிக முக்கியமானதாகும். இந்தாண்டு மாநில அரசு 125 லட்சம் டன் அரிசி தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை விளைவிக்கவும் சாகுபடி நிலங்களின் அளவை அதிகரிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் பற்றாக்குறை தானிய விளைச்சலைக் கடுமை யாக பாதிப்பதுடன் விவசாயிகளின் வருவாயையும் பாதிக்கும்.

எனவே, உரிய அலுவர்களுக்கு உத்தரவிட்டு, திட்டமிட்டபடி ஒட்டு மொத்த அளவிலான யூரியாவை யும், கூடுதலாக 25 ஆயிரம் டன் டிஏபி உரங்களையும், 10 ஆயிரம் டன் எம்ஓபி உரங்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித் துள்ளார்.

இந்த கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சரிடம் வழங்கி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x