Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும் : ஈடிசியா பொதுக்குழுவில் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும், என ஈடிசியா வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க (ஈடிசியா) பொதுக்குழு கூட்டம், சங்கத் தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சங்க செயலாளர் ராம்பிரகாஷ், துணைத்தலைவர்கள் தர், கந்தசாமி, பொருளாளர் பழனிவேல், இணைச்செயலாளர் சரவணபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

காகிதப் பொருட்கள், அட்டைகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், காகிதத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காகிதப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. மேலும், இவற்றை மறுசுழற்சி செய்யலாம் என்பதால், காகிதப் பொருட்களுக்கன ஜி.எஸ்.டி. உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது, மாற்று ஆதாரங்கள் இல்லாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுப்பொருளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இரும்பு, பிளாஸ்டிக், ஜவுளி நூல் போன்றவற்றின் மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தை கோவை மற்றும் சேலத்தில் முன்மொழியப்பட்ட தொழில் வழிப்பாதை திட்டத்துடன் இணைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கான ஏற்றுமதி முனையம் நிறுவப்பட வேண்டும். ஈரோடு மாவட்டத்திற்கான சூரிய மின்நிலையத் திட்டம் கிளஸ்டர் மூலம் நிறுவ வேண்டும். பெருந்துறை சிப்காட்டில் ரயில் சரக்கு முனையும் நிறுவ வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x