Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM

விஜயபாஸ்கர், ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்திய சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை : அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கருத்து

முன்னாள் அமைச்சர் சி.விஜ யபாஸ்கர் மற்றும் அவரது ஆதர வாளர்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை யில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் புதை சாக்கடைத் திட்டத்துக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தப்படவில்லை. ஏற்கெனவே, அவர் அமைச்சராக இருந்தபோதே அவரது வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செய்த முறைகேடு தொடர்பாக தான் தற்போது சோதனை நடைபெற்றது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முறையாக, வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்து வருகிறார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கைவாசல் கல்குவாரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கற்கள் வெட்டப்பட்டு இருப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆறுகள், குளங்கள் மாசடைவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட புதை சாக்கடை திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் அதை முறையாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x