Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : விநாடிக்கு 1,343 கனஅடி நீர் வெளியேற்றம்

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை நேற்று திறந்து வைத்த செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டம் தண்ட ராம்பட்டு அருகே சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் உள்ள 20 ஷட்டர்கள் அகற்றப்பட்டு, ரூ.55 கோடி மதிப்பில் புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. ஷட்டர்கள் அனைத்தும் 20 அடி உயரம் கொண்டது. இதனால், அணையில் 99 அடி வரை மட்டுமே தண்ணீரை சேமிக்க முடியும் என்ற நிலை உருவானது. இது தொடர்பாக, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தென்பெண்ணை யாற்று படுகையில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், கடந்த 2 வாரங்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்ததால், அணை யின் பாதுகாப்பு கருதி, அணை யில் இருந்து தண்ணீரை திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சாத்தனூர் அணை நேற்று காலை திறக்கப்பட்டது. செங்கம் சட்டப் பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி திறந்துவைத்தார். அப்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் சிவக்குமார், ராஜேஷ், மதுசூதனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அவை முழுவதுமாக வெளியேற்றப் படுகிறது. அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் வழியாக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டுக்கு விநாடிக்கு 843 கனஅடி தண்ணீரும் என மொத்தம் விநாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏரிகள் நிரம்பி திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட் டங்களில் 12,152 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மூன்று மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x