பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - ஊரக வளர்ச்சி பணியாளர்கள் 5 கட்ட போராட்டம் : மாநில தலைவர் சார்லஸ் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  -  ஊரக வளர்ச்சி பணியாளர்கள் 5 கட்ட போராட்டம் :  மாநில தலைவர் சார்லஸ் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழக அரசுக்கு எதிராக ஐந்து கட்ட போராட்டங்கள் நடத்தப்படவுள் ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் திண்டுக் கல்லில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முருகன், மாநில பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ் வரவேற்றார்.

கூட்ட முடிவில் மாநில தலைவர் சார்லஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தில் உள்ள தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தூய்மைக்காவலர் மற்றும் தூய்மைப்பணியாளர் சங்கம் ஆகிய சங்கங்களின் கோரிக் கையை நிறைவேற்றக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஐந்து கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம்.

முதல் கட்டமாக அக்டோபர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 29-ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டமும், மூன்றாம் கட்டமாக நவம்பர் 12-ம் தேதி மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டமும், நான்காம் கட்டமாக நவம்பர் 25-ம் தேதி அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டமும் நடைபெறவுள்ளது. ஐந்தாம் கட்டமாக டிசம்பர் 17-ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சி இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in