Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

8 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப்பின் - ஓம்பேட்டா வனப்பகுதியில் கண்டறியப்பட்ட ‘டி.23’ புலி :

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் 4 பேரைத் தாக்கிக் கொன்ற புலி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்த நிலையில், 8 நாட்களுக்குப்பின் கண்காணிப்புக் கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியிருப்பதாக வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட், மசினகுடிஉட்பட்ட பகுதிகளில் நான்கு மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்ற ‘டி.23’ என கண்டறியப்பட்ட புலியை, தமிழகம் மற்றும் கேரள வனத்துறையினர், அதிரடிப்படையினர் இணைந்து பல குழுக்களாகப் பிரிந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

புலி அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால், மயக்க ஊசி செலுத்தி அதை பிடிக்க முடியவில்லை. முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் நுழைந்த புலி, அங்கிருந்து மசினகுடி, சிங்காரா வனப் பகுதிகளுக்குள் நுழைந்து பதுங்கியது.

அதற்குப் பிறகு கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியும், ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தியும் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். கடந்த ஒரு வாரமாக எந்த கேமராவிலும் ‘டி.23’ புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை.

கேமராவில் சிக்கிய புலி

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியான போஸ்பாரா-ஓம்பேட்டா வனப்பகுதியில் ‘டி.23’ புலியின் நடமாட்டம், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அதை பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல்வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

‘டி.23’ புலியின் ரோமம், எச்சம் உட்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மத்திய உயிரியல் செல்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

குறி தப்பியதால் தப்பிய புலி

வனத்துறையினர் கூறும் போது, ‘இன்று (நேற்று) காலை ஓம்பேட்டா சந்திப்பில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் ‘டி.23’புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. ஒரு குழு குண்டித்தால் முகாமில் இருந்து ஓம்பேட்டா சென்றது.

மற்றொரு குழு, சின்னக் கள்ளியில் இருந்து ஓம்பேட்டா சென்றது. முதுமலை வனச்சரக பணியாளர்கள், லிங்கனகள்ளியில் இருந்து போஸ்பாராவுக்கு சென்றனர். லிங்கனகள்ளியில் இருந்து போஸ்பாரா செல்லும் வழியில் புலியை ஒரு குழுவினர் கண்டுள்ளனர்.

இதையடுத்து, அனைத்து குழுவினரும் அங்கு சென்று புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். புதரில் புலி இருந்ததை கண்டதும் மயக்க ஊசி துப்பாக்கியால் சுட்டோம். புதர் அதிகமாக இருந்ததால் குறி தவறிவிட்டது,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x