Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி : உணவுகூட கிடைக்காததால் பணியை நிறுத்திய ஊழியர்கள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதியுற்றனர். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு இடங்களில் உணவு, தண்ணீர் கூட கிடைக்காததால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மதிய உணவு வழங்கப்படாததால் ஊழியர்கள் பணியை நிறுத்தினர். சிலர் 2 உணவு பொட்டலங்களை எடுத்துச் சென்றதால் சிலருக்கு கிடைக்கவில்லை என்று கூறிய அதிகாரிகள், பின்னர் உணவுக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் வாக்கு எண்ணும் பணி சுமார் 45 நிமிடங்கள் தடைபட்டது.

குன்றத்தூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் எண்ணும் பணி மாங்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இப்பணியில் 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அங்கு குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனக்கூறி, வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து, ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பெரும்புதூர் ஒன்றியத்திலும் தேநீர், உணவு போன்றவை சரிவர வழங்கப்படவில்லை.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றிய வாக்குகள் படூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன. இப்பணிகளுக்காக 40 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு காலை உணவு 9 மணி வரையில் வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டது. இதனால், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 2 ஆசிரியர்கள் திடீரென மயங்கி கீழே விழுந்தனர்.

அவர்களை அங்கிருந்த போலீஸார் மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் பணியை புறக்கணிப்பு செய்வதாக கூறி வெளியேறினர். இதனால், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும். உடனடியாக உணவு தயார் செய்து வழங்கியதையடுத்து, ஆசிரியர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

காட்டாங்கொளத்தூர் வாக்கு எண்ணும் மையம், புனித தோமையார் மலை ஒன்றியத்தின் வாக்கு எண்ணும் மையத்திலும் இதே நிலை நீடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x