Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM
உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டும் நடத்தை விதிகள் தொடர்வதால் அரசுப் பணிகள் முழுவதும் முடங்கியுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி கடந்த மாதம் 22-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து கடந்த 30-ம் தேதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. குளறுபடிகளை சரிசெய்து புதிய அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடை ரத்து செய்து கடந்த வெள்ளிக்கிழமை 2-வது முறையாக தேர்தல் தேதியை அறிவித்தது. இது அரசியல்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திமுக மாநில அமைப்பாளர் சிவா, இடஒதுக்கீடு ரத்து அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அக்டோபர் 21-ம் தேதி வரை தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நிறுத்தப்பட்டாலும், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “அரசு அலுவலகங்களில் சாதாரண அடிப்படை பணிகள் கூட நடைபெறுவதில்லை. தேர்தல் நன்னடத்தை விதிகளை சுட்டிக் காட்டுகின்றனர்” என்று வருத்தம் தெரிவித்தனர். அரசு அதிகாரிகள் தரப்பில், தேர்தல் நன்னடத்தை விதிகள் இருப்பதால் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
பண்டிகை காலத்தில் நடத்தை விதிகள் தொடர்வது வியாபாரத்துக்கு இடையூறாக இருக்கும் என வர்த்தகர்கள் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.
தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உத்தரவு வர இன்னும் 10 நாட்கள் உள்ளன. ஆனால் நடத்தை விதிகள் தொடருமா என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தாமல் மவுனத்தில் உள்ளது.
அக்டோபர் 21-ம் தேதி வரை தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT