Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.சி.டி. அகாடமி மூலமாக மாணவர் மேம்பாட்டுக்கான சிறப்பு மையத்தை அமைத்துள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். ஐ.சி.டி. அகாடமியின் திட்டங்கள் செயலாக்கப்பிரிவு தலைவர் கே.ஏ.விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் மேம்பாட்டு சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருந்தது. மென்பொருள் நிறுவனங்கள் அதிகளவில் தொடங்கப்பட்டன. அப்போது தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை அளிக்க முன்வருமாறு, மத்திய அரசு ஐ.சி.டி. அகாடமியைக் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் உயர்கல்வித் துறையில் பணியாற்றும் பேராசிரியர்களின் தொழில்நுட்ப அறிவுத் திறனை மேம்படுத்த, பொதுமக்கள் - தனியார் நல்லுறவுத் திட்டம் வகுக்கப்பட்டது.
தற்போது ஹனிவெல் நிறுவனம் அளித்துள்ள ரூ.1 லட்சம் நிதியுதவியில் இந்த கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் 120 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது அளிக்கப்படக்கூடிய பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு உலக அளவில் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால் அதிக மாணவர்கள் பயனடைவார்கள்” என்றார்.
விழாவில் ஐ.சி.டி. அகாடமி நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.l
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT