Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

தேன், கிழங்கு சேகரிக்க - வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்க பழங்குடியின மக்கள் தொடர் வலியுறுத்தல் :

வனப்பகுதிக்குள் தேன், கிழங்கு சேகரிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டுமென, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், போச்சம்பள்ளி ஒன்றிங் களுக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி, பூமாலைநகர், காரக்குப்பம், ஜவுக்பள்ளம், எம்ஜிஆர்நகர், பழனி ஆண்டவர் நகர், தந்தோசன்கொல்லை, காளிக்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியில் தேன், கிழங்கு, கீரைகள், பழங்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் செல்ல இவர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். தங்களுக்கு காட்டிற்குள் செல்ல உரிய அனுமதி வழங்க வேண்டும் என பழங்குடின இருளர் இன மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, தேனி மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு காட்டிற்குள் சென்று தேன்,கிழங்குகள், பழங்கள் எடுக்க அனுமதி அளித் துள்ளனர். இதற்காக அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே நாங்கள் மனு அளித்தோம். தகுதி உள்ள நபர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அப்போதைய ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தை காக்க, காட்டிற்குச் செல்ல அனுமதியும், அடையாள அட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x