Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

லாரி மீது கார் மோதல் 2 பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு :

சோழவரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள்களான கனிஷ்கா(16), அஸ்விதா(14) ஆகிய இருவரும் பொன்னேரி அருகே பஞ்செட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். வழக்கமாக தன் மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்குமார், நேற்று பணி நிமித்தமாக வெளியே சென்றார். ஆகவே, நேற்று கனிஷ்கா, அஸ்விதாவை அவர்களது தாய் மாமா நாகராஜ், தன் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சென்னை - கொல்கத்தா தேசியநெடுஞ்சாலையில், சோழவரம் அருகே காரனோடை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இச்சம்பவத்தில், படுகாயமடைந்த கனிஷ்கா, நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அஸ்விதா பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, அவரை மீட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அஸ்விதா தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இதுகுறித்து, தகவலறிந்த சோழவரம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, கனிஷ்கா, நாகராஜ் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிகிச்சை பலனின்றி அஸ்விதாவும் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x