Published : 11 Oct 2021 03:15 AM
Last Updated : 11 Oct 2021 03:15 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - பருவ மழைக்கு 75 இடங்களில் பாதிப்பு ஏற்படும் : கூடுதல் கவனம் செலுத்த ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையில் வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ். அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

வட கிழக்கு பருவ மழையின்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 75 இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அனைத்து துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 67 இடங்களில் மிதமான பாதிப்பும் மற்றும் 8 இடங்களில் குறைந்தளவு பாதிப்பு என 75 இடங்களில் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 4 அணைகள், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,253 ஏரிகள் உட்பட அனைத்து நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x