Published : 11 Oct 2021 03:15 AM
Last Updated : 11 Oct 2021 03:15 AM

செங்கம் அருகே ஓடையில் மூழ்கி உயிரிழந்த - சிறுவனின் உடலுடன் கிராம மக்கள் சாலை மறியல் :

செங்கம் அருகே ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருவண்ணாமலை

செங்கம் அருகே ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுடன் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் தாமோதரன். இவரது மகன் சற்குணன்(4). இவர் தனது தாய் ரேகாவுடன், அதே பகுதியில் உள்ள ஓடையை நேற்று முன் தினம் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஓடையில் நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீரில் மூழ்கி சற்குணன் உயிரிழந்துள்ளான்.

இந்நிலையில், ஓடையை கடக்க பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால், 4 வயது சிறுவனின் உயிர் பறிபோயிருக்காது எனக் கூறி, சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ் வழியாக சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி சின்னராஜ் தலைமை யிலான காவல்துறையினர் சம்பவஇடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சிறுவனின் உடலும், வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x