Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

காஞ்சி, செங்கையில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு : முதியோர், பெண்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் வாக்களித்தனர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. முதியோர் உட்பட பொதுமக்கள் பலர் வந்து வாக்களித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜா, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரகஉள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 313 பேரும், 176 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 808 பேரும், 176 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3651 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீத வாக்குகள் பதிவாகின. நண்பகல் 1 மணிக்கு 42.60 சதவீதமாக வாக்குப் பதிவு உயர்ந்தது. பிற்பகல் 3 மணிக்கு 58.27 சதவீதம் வாக்குகள் பதிவானது.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதற்கட்டமாக திருப்போரூர், திருக்கழுக்குன்றம், புனித தோமையார் மலை, லத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 8 மாவட்ட கவுன்சிலர், 74 ஒன்றிய கவுன்சிலர், 160 ஊராட்சி தலைவர், 1230 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இதற்காக, மேற்கண்ட 4 ஒன்றியங்களில் 1,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் ஒன்றியம் வடநெம்மேலி ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் குழிப்பாந்தண்டலம் மற்றும் நென்மேலி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார். வாக்குச்சாவடி மையத்தில் பணியிலிருந்த அதிகாரிகளிடம் வாக்குப்பதிவு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் வாக்குப்பெட்டிகளை விதிகளுக்கு உட்பட்டு சரியான முறையில் கையாள வேண்டும் என அறிவுறுத்தினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் காலையில் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. காலை9 மணிக்கு 4.88 சதவீத வாக்குகளே பதிவாகின. மாலை 3 மணி நிலவரப்படி 46.30 சதவீதமாக உயர்ந்தது.

இதுகுறித்து, ஆட்சியர் ராகுல்நாத் கூறியதாவது:

மேற்கண்ட 4 ஒன்றியங்களிலும் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் 2,351 பேர் ஈடுபட்டனர். கரோனா தொற்றை தடுக்கும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உடல் வெப்பம் பரிசோதிக்கவும் மற்றும் கிருமிநாசினி வழங்கும் பணிகளில் 2,222 பேர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் 2,315போலீஸார் ஈடுபட்டனர். மழை காரணமாக சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x