Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM
வடகிழக்கு பருவமழைக் காலத்தில், கோவை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் சராசரி மழையளவும், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சராசரியை விட அதிகளவு மழையளவும் இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழைக்கான (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) முன்னறிவிப்பு செய்வதற்காக, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து, ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு நடப்பாண்டுக் கான வடகிழக்குப் பருவமழை அளவு கணிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாத புரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய 28 மாவட்டங்களில் சராசரியாக மழையளவு இருக்கும்.
சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் சராசரியை விட மழை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கோவையில் 320 மி.மீ, திருப்பூரில் 310 மி.மீ, ஈரோட்டில் 280 மி.மீ, நீலகிரியில் 430 மி.மீ, சேலத்தில் 370 மி.மீ, நாமக்கல்லில் 300 மி.மீ, தருமபுரியில் 310 மி.மீ,கிருஷ்ணகிரியில் 270 மி.மீ, சென்னையில் 880 மி.மீ, திருச்சியில் 390 மி.மீ, மதுரையில் 420 மி.மீ, திருநெல்வேலியில் 520 மி.மீ, தஞ்சாவூரில் 600 மி.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT