Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM

கிரானைட் கற்கள் கடத்தி வந்த லாரிகள் பறிமுதல் :

கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளஉதவி இயக்குநர் பொன்னுமணி தலைமையில் அலுவலர்கள், கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கணவாய்பட்டி மங்கள புரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த லாரியை சோதனையிட்டதில், உரிய அனுமதியின்றி 3 யூனிட் எம்.சாண்ட் மணல் கொண்டு வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் கனிம வளத்துறை அலுவலர்கள் புகார் அளித்தனர். இதேபோல்பீமாண்டப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி அருகே கிரானைட் கல் ஏற்றி வந்த லாரியை, அதன் ஓட்டுநர் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடினார்.

அதிகாரிகள் லாரியை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலானகிரானைட் கல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல், கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கல் கடத்தி வந்த லாரியை கனிமவளத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x