Published : 06 Oct 2021 03:14 AM
Last Updated : 06 Oct 2021 03:14 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று - ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு : சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று முதற் கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,079 ஊராட்சி வார்டு உறுப்பினர், 138 ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர், 14 மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சிலர் என மொத்தமுள்ள 2,478 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காட்பாடி ஒன்றியத்தில் 2 ஒன்றியக் குழு கவுன்சிலர்கள், 16 கிராம ஊராட்சி தலைவர்கள், 298 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 316 பதவிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வார்டுகள் மற்றும் 2 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

மாவட்டத்தில் முதற் கட்டமாக காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற் கட்ட தேர்தலில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 103 பேர் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 862 வாக்குச்சாவடிகளில் 209 பதற்றமானவை.

719 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மேற்பார்வையில் சுமார் 1,800 காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற் கட்டமாக இன்று ஆற்காடு, திமிரி மற்றும் வாலாஜா ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 56 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 123 கிராம ஊராட்சி தலைவர், 816 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 1,001 பதவிகளுக்கான தேர்தலில் 2,707 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 653 வாக்குச்சாவடிகளில் 196 பதற்றமானவை என கண்டறிந்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் மேற்பார்வையில் சுமார் 1,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர்கள், 125 ஒன்றிய கவுன்சிலர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட 1,779 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 2 கட்டங் களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி மற்றும் நாட்றாம்பள்ளி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு முதற் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், 9 மாவட்ட கவுன்சிலர்கள், 83 ஒன்றிய கவுன்சிலர்கள், 137 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 1,188 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. பதற்றமான 78 வாக்குச்சாவடி மையங் களில் பதிவாகும் வாக்குகளை நேரலையில் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர பிற வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்குச்சாவடி மையங் களை கண்காணிக்கவும், வாக்குப் பதிவின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாவட்ட தேர்தல் பார்வையாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

4 வாக்குச்சீட்டுகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் நான்கு வாக்குகள் அளிக்க வேண்டும். இதில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளருக்கு மஞ்சள் நிறம், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளருக்கு பச்சை நிறம், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளருக்கு இளஞ்சிவப்பு நிறம், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பாளருக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிக்கு முடிகிறது. இதில், வாக்காளர்கள் கரோனா சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பத்தூரில் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

தேர்தலில் பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க ஏதுவாக காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில், 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்று திருப்பத்தூர் நகர் பகுதியில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்புப்பணிக்காக தி.மலை, நாமக்கல், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எஸ்.பி., தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 3 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 27 காவல் ஆய்வாளர்கள், 52 உதவி காவல் ஆய்வாளர்கள், 149 சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள், 211 தலைமை காவலர்கள், 483 காவலர்கள், 564 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,694 பேர் முதற் கட்ட தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபடவுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x