Published : 04 Oct 2021 03:11 AM
Last Updated : 04 Oct 2021 03:11 AM

உதகையில் ரூ.1.40 கோடி மதிப்பில் - பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் விரைவில் அமைக்கப்படும் : நகராட்சி ஆணையர் தகவல்

உதகை

உதகையில் ரூ.1.40 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் விரைவில் அமைக்கப்படுமென நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகைக்குதமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும்ஆண்டு தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் உதகை-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். உதகை நகரில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், சுற்றுலா சீசன் காலத்தில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இதனை கருத்தில் கொண்டு உதகையில் பன்னடுக்கு வாகனநிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டும், திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக நகர்ப்புறவளர்ச்சித் துறை மூலம் உதகையில் ‘மல்டி லெவல் பார்க்கிங்’ அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி கூறியதாவது: உதகை ஏ.டி.சி. பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் முறை மூலம் கார்கள், இருசக்கர வாகனங்கள், சுற்றுலா பேருந்து ஆகியவற்றை நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சாலையோரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களின் அருகே வாகனங்கள் நிறுத்தப்படுவது குறையும்.

மல்டி லெவல் பார்க்கிங் தளத்தை சுற்றி கடைகள் அமைக்கப்படும். கட்டண முறையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும். முதல்கட்டமாக வருவாய்த் துறையிடம் இருந்து அந்த நிலத்தை நகராட்சி பெற உள்ளது. தொடர்ந்து அரசு அனுமதி பெற்று விரைவில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x