Published : 04 Oct 2021 03:12 AM
Last Updated : 04 Oct 2021 03:12 AM

செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் - தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு :

செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு சைக்கிளில் வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக இருப்பவர் சைலேந்திரபாபு. இவர் வார இறுதி நாட்களில் சைக்கிளில் செல்வது வழக்கம். அவர் நேற்று சைக்கிளில் செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர், கடந்த தேர்தலின்போது செங்கல்பட்டில் எந்த குற்றச் சம்பவங்களும் நடைபெறாமல் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கினார். மேலும் காவலர்கள் சிறப்பாக பணியாற்ற அறிவுரை கூறினார்.

அங்குள்ள காவலர்கள் குடியிருப்புக்குச் சென்ற அவர், காவலர்களின் குழந்தைகளுடன் உரையாடினார். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அங்கு இருந்த மாணவர்களுக்கு அவர் தாம் எழுதிய புத்தகங்களையும் வழங்கினார். பின்னர், செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட அவர் திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x