Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM

உதகையில் வாகன தணிக்கையின்போது - போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் :

உதகையில் நடைபெற்ற வாகனதணிக்கையில் போக்குவரத்து விதிமீறிய வாகன உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அரசியல் கட்சி சார்ந்தவர்கள்அல்லது மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கட்சிக்கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும். வாகனத்தின் முன்புறம் தனது பதவிகளை கொண்ட பலகைகள் வைத்திருப்பின், அதையும் அகற்ற வேண்டும். வாகனத்தின் உரிமையாளர், அவர்களது வாகனத்தில் வண்ண விளக்குகள், கண்கூசும் தன்மை கொண்ட அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள், அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்கள் போன்ற மாற்றங்கள் செய்யக்கூடாது.

வாகனங்களில் இடது மற்றும் வலது பக்கம் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் கண்டிப்பாக வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பன உட்படபல்வேறு வாகன விதிமுறைகளை கடைபிடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

நீலகிரி மாவட்டம் உதகையில் மேற்காணும் போக்குவரத்து விதிமுறைகள் நேற்றுமுதல் அமலுக்குவந்தன. உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நகர டிஎஸ்பி பி.மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது.

போக்குவரத்து விதிமீறிவாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர், கொடிக் கம்பம்,பெயர் பலகை, கூடுதல் விளக்குகள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறிய வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

போலீஸார் கூறும்போது, ‘உதகையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 16 வாகனங்களில் இருந்து பம்பர், 20 வாகனங்களில் கொடிக் கம்பம், 29 வாகனங்களில் கூடுதல் விளக்குகள், பெயர் பலகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறிய வாகன உரிமையாளர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x