Published : 03 Oct 2021 03:12 AM
Last Updated : 03 Oct 2021 03:12 AM

தடுப்பூசியை எடுத்துச் சென்ற ஊழியர் விபத்தில் உயிரிழப்பு : நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கரோனா தடுப்பூசிகளை எடுத்துச் சென்ற தற்காலிக ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

மானாமதுரை அருகே சூரக்குளத்தைச் சேர்ந்த முத்தையா மகன் முத்துபிரகாஷ் (24). இவர் மானாமதுரை வட்டாரத்தில் சுகாதாரத்துறையில் கொசுப்புழு ஒழிப்பு தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்தார். கடந்த செப்.30-ம் தேதி மேலநெட்டூர் சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசிகள் தீர்ந்துபோயின.

இதையடுத்து முத்துபிரகாஷ் தெ.புதுக்கோட்டையில் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மேலநெட்டூருக்குச் சென்றார். கோச்சடை அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். அவர் தற்காலிக பணியாளர் என்பதால், சட்டப்பூர்வமாக அவரது குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனா தடுப்பூசி பணியின்போது இறந்த தால், அவரது குடும்பத்துக்கு உடனடியாக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் குமார் வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x