Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM

சிவகங்கையில் கழிவு நீர் பாலங்கள் உடைப்பு : ஒரு வாரமாக மக்கள் தவிப்பு

சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் பாலம் தோண்டப்பட்ட இடத்தில் உள்ள பள்ளத்தைப் பார்வையிட்ட எம்எல்ஏ செந்தில்நாதன் உள்ளிட்டோர்.

சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் 5 இடங்களில் தெரு பாலங்கள் உடைக்கப்பட்டதால் ஒரு வாரமாக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சிவகங்கை நகராட்சியில் கடந்த வாரம் வடிகால்கள், கழிவுநீர் கால் வாய்கள் சீரமைக்கும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர்.

அப்போது சத்தியமூர்த்தி தெரு, சரோஜினி தெரு, தலைவர் சின்னச்சாமி தெரு, புதுத்தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய 5 இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் மேல் அமைக்கப்பட் டிருந்த பாலங்களை உடைத்து அகற்றிவிட்டனர். அதன் பின் ஒரு வாரமாகியும் புதிய பாலத்தைக் கட்டவில்லை. இதனால் அவ் வழியாக நடந்து செல்லக்கூட முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக பாலம் தோண்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சோனைமுத்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார்.

இந்நிலையில் நேற்று காலை தெரு பாலங்கள் உடைக்கப்பட்ட பகுதிகளை செந்தில்நாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பாலப் பணிகளை முடிக்குமாறு நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். இதற்குத் தேவையான நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கி தரவுள்ளேன் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x