Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு - விரைவில் காவிரி குடிநீர் திட்டம் : அமைச்சர் துரைமுருகன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, காட்பாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 6-ம் தேதி முதற் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் விடுபட்ட அனைத்து பகுதி களுக்கும் நானே முன்னின்று காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து தருவேன். இந்தப் பகுதியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மின் துறை அமைச்சர் வேலூரில் தான் உள்ளார். அவரை நாளை அனுப்பி வைக்கிறேன். உங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார். மேலும், தேர்தல் முடிந்தவுடன் ஒரு வாரத்தில் நெசவாளர்களுக்கும், முதியோர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x