Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

சுற்றுலா தின படகு போட்டியில் சென்னை ஜோடி வெற்றி :

சுற்றுலா தினத்தையொட்டி உதகை படகு இல்லத்தில் நேற்று படகு போட்டி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா போட்டிகளை தொடங்கி வைத்தார். ஆண்கள் மற்றும் கலப்புப் பிரிவு என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கலப்புப் பிரிவு போட்டியில் சென்னையை சேர்ந்த ராகவேந்திரன், பவானி ஜோடி முதலிடம் பிடித்தது. கோவையை சேர்ந்த ஷாகுல் ஹமீத், பல்கீஸ் இரண்டாமிடமும், கேரளாவை சேர்ந்த பரவீன், திஷா மூன்றாமிடமும் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் உதகையை சேர்ந்த திலிப், சுவாமிநாதன் ஜோடி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசும்போது ‘‘நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக சுற்றுலா தலங்கள் உள்ளதால் வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் சுற்றுலா பயணிகள், கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்,’’ என்றார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பாக ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தோடர், கோத்தர் மற்றும் படுகர் இன மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, உதகை படகு இல்லம் கோட்ட மேலாளர் மைக்கேல் கிறிஸ்டோபர், உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, உதகை படகு இல்ல மேலாளர் சாம்ஸன் கனகராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x