Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

தி.மலையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் உடல் - 3 நாட்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு : நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி

தி.மலையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் மரணத்துக்கு சட்ட ரீதியாக நீதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் உறுதி அளித்ததை தொடர்ந்து, 3 நாட்களுக்கு பிறகு மனைவியின் உடலை கணவர் நேற்று பெற்றுக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தில் வசித்தவர் முருகன் மனைவி ராஜகுமாரி(39). கர்ப்பப்பை நீர் கட்டியால் அவதிப்பட்டு வந்தவருக்கு, தி.மலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி லேப்ரோஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது அவரது இதயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி,தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனியார் மருத்துவமனை நிர்வாகம் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி, கடந்த 22-ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, கடந்த 23-ம் தேதி பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை ஒப்படைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், மனைவியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை உடலை பெற்றுகொள்ள முடியாது என கணவர் முருகன் தெரிவித்துள்ளார். 3-வது நாளாக, அவரது போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.

அறிக்கைக்கு எதிர்ப்பு

இந்நிலையில், தி.மலை ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவுடன் சென்று முருகன் நேற்று மனு அளித்தார். அந்த மனுவில், “நலப்பணிகள் இணை இயக்குநர் நடத்திய விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம், உண்மைக்கு புறம்பாக உள்ளது. சிறப்பு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்ததாக தெரிவித்துள்ள இணை இயக்குநர், தனியார் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யவில்லை. தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாகவே, அவரது விசாரணை அறிக்கை உள்ளது. எனவே, தி.மலை இணை இயக்குநர் சமர்ப்பித்துள்ள அறிக்கையை புறம்தள்ள வேண்டும்.

ஜிப்மர் சிறப்புக் குழு

மேலும், எய்ம்ஸ் அல்லது ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் களை கொண்ட குழுவிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும். அக்குழு மூலமாக, ராஜகுமாரியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவர், ராஜகுமாரியின் மரணத்துக்கு சட்ட ரீதியான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, உடலை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, 3 நாட்களுக்கு பிறகு ராஜகுமாரியின் உடலை அவரது கணவர் முருகன் நேற்று மாலை பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x