Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM

திருப்பூரில் திடீர் மழையால் குளம் போல தேங்கிய தண்ணீர் :

திருப்பூர் மாநகரில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்பூர் மாநகரில் நேற்று பகலில், வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. மாலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் பேருந்து நிறுத்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால், மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய பலரும் கடும் அவதிக்கு ஆளாகினர்.

ஊத்துக்குளி சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இளைஞர் ஓட்டி வந்த கார் ஒன்று மழைநீரில் சிக்கியது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் வடக்கு தீயணைப்புத் துறையினர் இணைந்து காரை கயிறு கட்டி மீட்டு அப்புறப்படுத்தினர். அவிநாசி சாலை, புதிய பேருந்து நிலையம், பூங்கா சாலை, ரயில் நிலையம் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்லமுடியாதபடி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராயபுரம் பகுதியில் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சாலையில் திடீரென மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சிக்கினார். காலில் காயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x