Last Updated : 24 Sep, 2021 03:23 AM

 

Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

பழங்குடியினர் மூலம் தேனி மலைப்பகுதியில் - இயற்கை வேளாண்மை பரப்பு அதிகரிப்பு :

தேனி மாவட்ட மலைக் கிராமங் களில் பழங்குடியினர் மூலம் இயற்கை வேளாண்மை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே முதுவாக்குடி, சொக்கனலை, கரும்பாறை, ராசி மலைக் காலனி, சிறைக்காடு,செல்லாங்காலனி, சோலையூர், மேலப்பரவு, முந்தல், எண்டப்புளி நேரு நகர், உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் பழங்குடியினர் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

2006 வன உரிமைச்சட்டத்தின் கீழ் இங்குள்ள 110 பேருக்கு 2018-ம் ஆண்டில் விளைநிலங்கள் வழங்கப்பட்டன. விவசாயம் செய்து கொள்ளும் அனுபவிப்பு உரிமையாக இந்த நிலங்களை இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நபார்டு வங்கி உதவியுடன் பழங்குடியின விவசாயிகளுக்கு ஆரூடெக்ஸ் தன்னார்வ அமைப்பின் மூலமாக, அபிவிருத்தி மற்றும் இயற்கை வேளாண் பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக மரக்கன்றுகள், ஊடு பயிருக்கான பீன்ஸ் விதைகள், இயற்கை உரம், பாசனத்துக்காகத் தண்ணீர் தொட்டி, மேடான பகுதிகளுக்கு நீர் எடுத்து செல்வதற்கான வசதிகள் செய்து தரப்பட்டன.

இதன் மூலம் காபி, மிளகு, ஏலக்காய்,கிராம்பு, எலுமிச்சை, ஆரஞ்சு, பலா, அவக்கோடா உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது.

இவற்றை மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் சசிகுமார் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

ஆரூடெக்ஸ் இயக்குநர் ராஜா, பழங்குடி இனத்தலைவர்கள் கண்ணன், கருப்பையா, மாரி முத்து, ஒருங்கிணைப்பாளர் விவேக் உட்பட பலர் கலந்து கொண்டனர். வங்கி மேலாளர் சசிகுமார் கூறுகையில், புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரப்பயிர்கள் அதிகளவில் பயிரிடப் பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ரசாயனக் கலப்பில்லாத விளை பொருட்கள் கிடைப்பதுடன் மலைப் பகுதிகளில் இயற்கை வேளாண் பரப்பும் வெகுவாக அதிகரித்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x