முதியவர் கொலை வழக்கில் - இளைஞருக்கு ஆயுள் தண்டனை :

முதியவர் கொலை வழக்கில் -  இளைஞருக்கு ஆயுள் தண்டனை :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கயத்தூறு அருகே முதியவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தூறு அருகேயுள்ள வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் மனைவி காளீஸ்வரி (26). இவர், கடந்த 23.01.2019 அன்று தனது குழந்தையை திட்டியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் பாலமுருகன் (27) என்பவர் தனது தாயாரை காளீஸ்வரி திட்டுவதாக கருதி, அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.

இதை பார்த்த காளீஸ்வரியின் தாத்தா மு.ஆறுமுகம் என்ற ஆறுமுகப் பெருமாள் (60) அங்கு வந்து தடுத்துள்ளார். அப்போது அரிவாளால் வெட்டப் பட்டதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார். இது தொடர்பாக கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தி பாலமுருகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன், பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் சுபாஷினி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in